சனி, நவம்பர் 03, 2018

ராஜலட்சுமியைப் பார்த்தவள்


என்னால் சொல்ல முடியாது
சற்றுமுன்கூட பதற்றமானது

ஒளிபொங்கும் பாதையின்
சிறுகிளைச்சந்தில் தனித்து நடந்த 
சீருடைச்சுடிதார் சிறுமகள் பின்னால் 
நடந்து போன என் மனமே 
திரும்பாதபோது எப்படிச்சொல்வேன்

விற்பனைப்பணி முடித்து பேரங்காடி வாசலில் 
பேருந்துக்காக நிற்கும் ஒடிசல்பெண்ணின் 
சேலைக்கறை பார்த்தே கசங்கிவிட்ட
என்மனதால் எப்படி இயலும்
கொத்தாய் விழுந்த தலை 
கொண்டவளைப் பற்றி எழுத

வெஞ்சினங்கொள்ள
வெறிகொண்டு தாக்க
வெட்டித்தறிக்க
நூறாயிரங்காரணமுள்ள ஊரில்
ஒற்றைச்சிறுமி மேல் அத்தனையும் இறக்கிய 
இழிமகன் மேல் துப்ப
அடிவயிற்றிலிருந்து ஆங்காரம் தேக்கி 
எச்சில் கூட்டலாம்
எரிதழல் வீசலாம்
எழுதவும் கூடுமோ

சொட்டிய ரத்தம் பார்த்து
உறைந்த உடல்
உதறுகின்றது
சாதியா மதமா இனமா
பணமா
என்ன சனியனாகவும் இருக்கட்டும்
அவன் வீச்சரிவாளில் ஒட்டிக்கொண்டிருந்த அதை எப்படிக் கழுவப்போகிறீர்கள்
எட்டூர் வீச்சம் இன்னும் உங்கள் நாசி துளைக்கவில்லையா

வேர் தூர்ந்த செடிகள்


பத்துக்குப்பத்து குப்பத்துக்குடிசை 
உத்திரம் இடிக்கும்போதெல்லாம்
தீபாவளியோ திருவிழாவோ வர ஏங்குகிறான்
தோட்டத்தின்
கயிற்றுக்கட்டிலில்
கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்த
நீலக்கூரை பார்த்த நினைவில்

தயாரிப்பு கைவராது
திருப்பி அனுப்பப்படும் எச்சில் 
ஆலுபரோட்டாவை மெல்லும்போதெல்லாம்
சப்பை மூக்கைத் தடவிக்கொள்பவனின்
நாசிக்குள் ஏறி இறங்குகிறது
மலைக்குடிசையின் புகையும்
முக்காடை இழுத்துவிட்டபடியே
அலட்சியமாக அன்னை தட்டிப்போடும்
ரொட்டிவாடையும்

சூடிக்கொள்ள நேரமிலா காளி


ஒற்றை மலருக்கு உருகவும் பெருகவும் 
அறியவேயில்லை என்றும்
நிறுக்கவும் தொடுக்கவும் 
நறுக்கவும் நீட்டவுமான
நார்ப்பாடு
சற்று கூப்பாடு
சரங்களைச்சுற்றுகையில் 
உள்பந்தினுள் நுழைத்துவிடுவதுண்டு 
பிடுங்கல்களை
விரித்த பாலிதீன் 
எடுத்த கூடை
எல்லாம் அவளைப்போல 
மன(ண)த்தைக் கட்டிக்கொண்டு அலையாது
இறக்கி விடுவதே வாழ்வு

யீங்

அலமாரி இருள் புழுக்கத்திலிருந்து
அரை வெளிச்சம் பார்த்த ஒரு நாளைக் 
குடை அசை போட்டுக்கிடக்கிறது
சொட்டி முடிக்கும் கடைசித்துளியிடம் 
அப்புறம்..எப்போ என்றிருக்குமோ

*********************************************************
தளர்நடையோடு முக்கி சுமந்துவந்து 
சொப்பு சாமான்களைப் பிரித்து 
விளையாட்டுக்குத் தயாராகும் 
குட்டிப்பாப்பா போலத்தான்
இருந்தது அதிகாலைச்சூரியன்
யீங் என்றொரு முனகலோடு
கால் மாற்றிப்படுத்துக்கொண்ட
நாய்க்குட்டியைப் பெரிதாய்க்
கண்டுகொள்ளாமல்


***********************************************


மழை பருகிய நாள்

இறக்கிவைத்தவன்
போனபிறகு
அந்த சொற்களைப் பாதுகாப்பாகப் 
பட்டுப் பேழையிலிட்டாய்
திறப்பதற்கு விரல் நீளும்போதெல்லாம் 
ஒரு செம்பருத்தியைக் 
கிள்ளிச்சுற்றிக்கொண்டுதானே நடப்பாய்
இன்றென்ன வந்ததாம்
ஊரெல்லாம் துர்க்கந்தம்


**************************************************************
முன்முற்றச்சிறு வெளியில் 
தேங்கிக்கிடக்கும் நீர் சொல்கிறது மழையை
உதறி உதறி
பிலுபிலுவென ஆடிக்கொண்டிருக்கின்றன 

அடர்வேம்பின் பழங்கள்
வெளி உலகின் மழையைப் பார்க்க 

ஒன்றிரண்டு இறங்கியுமிருக்கலாம்

***************************************************************
தவிட்டுக்குருவி
அணில் வரிசை
முன்பின்னான காக்கை
சோனி நாய் அதன் குட்டி
எல்லாமே உறங்கியாயிற்றா
மழை அரவந்தவிர 

வேறொன்றும் தொனிக்காத முற்பகலில்




நினைவில் வளரும் கறிவேப்பிலைச் செடி

கையை மாற்றி மாற்றிப் பற்றிக் கொண்டோம்
சுந்தரி டீச்சர் தொடங்கி 
நெட்டை கீதா குட்டை கீதா
நாங்கள் முதன்முதலில் பார்த்த
தேன்மிட்டாய்காரர் வீட்டு கிளிக்கூண்டு
ஒரு முழத்துக்குமேல் 
எப்போதும் வளராத கறிவேப்பிலைச்செடி

தெப்பக்குளக்கரை வளையல்கடை
கட்டுரைநோட்டு அடுக்கை
சாலைக்கு எதிர்புற வகுப்பறைக்கு 
எடுத்துச்செல்கையில் தவறவிட்டது

ஆச்சே....இருவது வருசம்கிட்ட
......ஒரு வருசம் பேசலாம் நம்ப கதைய 
எனச்சிரித்தபடி நகர்ந்தோம்
அப்புறம்தான் நினைவு வந்தது
வீட்டைச்சொல்லாது விடை பெற்றதும்
அவள் நெற்றித் தழும்பு
இப்போதும் தெரிந்ததும்....


மறந்துவிடாமல் குனிந்து நிலை தாண்டினேன்

அக்டோபர் 14 காமதேனுவில் 

நேற்று என்றொருநாள்


கண்பிய்ந்து வரும்படி தேய்த்துத் 
தேய்த்து துடைத்த நேற்று
எரிகற்களைப் பிடித்துப் பிடித்து
வெந்த உள்ளங்கையிலிருந்தே திருப்பி வீசிய நேற்று
தெள்ளிய நோக்கமே இதுவென
பொறுக்கிப்பொறுக்கி தோல்நீக்கி ஊதி 
நிலக்கடலை பங்குவைத்த நேற்று
புழுக்கத்தையெல்லாம் கொட்டிய நேற்று
கரப்பான் பூச்சிகளுக்கு மருந்தடித்த நேற்று
நாணயம் சுண்டிப் பயணித்த நேற்று
தலைசுமந்த குடங்கள் 
தளும்பாது நடந்த நேற்று
சுவர்களின் கரிவசவுகளைக் 
கண்கசக்காது கடந்த நேற்று
எல்லா நேற்றிலும் இருந்த நீ
எல்லா நாளையிலும் இருந்தாய்
இல்லாமல் போன நாளைகளும் 
இப்போது நேற்றாகிப்போயின
நேற்றிலிருந்து வெளியில் வருவதா
நேற்றிலேயே இருப்பதா 
குழம்பிக் கொண்டிருக்கையிலேயே 
நாளை நேற்றாகிவிடுகின்றது


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...