வியாழன், டிசம்பர் 20, 2018

எங்கிருந்தாவது ஒருவன் வந்துவிடுகிறான்


பிடித்த தராசின் முள் நடுநின்றபின்னும்
நாலு அவரைக்காயை எடுத்துப்போட

வழியடைத்து நிற்கும் மக்களை விலக்கி 
ஆயாவை
வரிசை முதலில் முன்னேற்ற

பயிற்சியில் தடுமாறி
விழும் சிறுமியை நிமிர்த்தி
ஏசாமல் 
சைக்கிள் வளைவை சரிசெய்து வழியனுப்ப 

எல்லோரிடமும் கையொப்பம் வாங்கி 
சாய்ந்த மின்கம்பம் சரிசெய்ய

வெள்ளம் புயலென்றால் 
பதறிப்பதறி நிதி வேண்டிப் பொருள்வேண்டி 
ஊண் உறக்கமின்றி களம்காண

முக்கியமாக   இவையெதையும் 
தன் கூடுதல் மனிதமெனக் குழப்பியடிக்காது
எங்கிருந்தோ வந்து விடுகிற
ஒருவன்களை
இளக்காரச்சிரிப்பொன்றை
 இதழ்க்கடையில் சேர்க்காது
பார்த்தும் பாராதது போலக் 
கடந்து போங்கள் 
பரவாயில்லை


கனம்தாங்காக் காற்று


அடுத்த உடுத்தலுக்குமுன்
இந்தக்கோடியிலும் அந்தக்கோடியிலுமாக 
ஏதோ ஒரு பிடிமானத்தைப்
பற்றிக்கொண்டு
காயும் பழஞ்சீலை
கரைந்த சாயத்தையும்
காணாமற்போன கோடுகளையும் 
வெயிலிடம் பீற்றிக்கொண்டிருக்கிறது
முறையிடலின்
கனம்தாங்காக் காற்று 
உய் உய்யென ஓடிவந்து 
பரிவாகத்தடவிப்போகிறது

மழைத்தாரையின் கீழ் சுகமாக நிற்கிறது பாறை
பிரியம் என்றுமில்லை பேதமை என்றுமில்லை
சுகம் என்பதும் என் சொல்லே
களத்துமேட்டிலும்
கரிபிடித்த அடுப்பங்கரையிலும் கரைந்து கரைந்து
நைந்த
முந்தானை ஒன்றே காசு முடிச்சுக்கும் 
வியர்வை துடைக்கவுமாகக் கொண்டு
கூடை சுமக்கும் தெய்வானை ஆச்சியைப்போல

மேலிருந்து கீழாக


பட்டுப்போகவுமில்லாமல்
துளிர்க்கவுமில்லாமல்
சவலையாகவே நின்ற
மிளகாய்ச்செடியை அகழ்ந்தெடுத்துவிட்டுப் 
புதிய கன்று ஒன்றை நட 
ஒரு காலையும் சிறு கவலையும் 
போதுமாயிருந்தது
விளையவிருக்கும் காரத்தின் கற்பனையிலோ
ஒரு பருவமும் உளைச்சலும்
காம்பிலிருந்து வீழ்த்திய
பெரியப்பன் நினைவிலோ
கண்துடைத்தபடி படியிறங்குகிறான்
மாடித்தோட்டக்காரன்




வியாழன், நவம்பர் 22, 2018

குருவிவால் தேய்பிறையும் வடிவேலுவும்

வாய்ப்பின் அடுத்தபடி
குருவிவால் தேய்பிறைதான் 
இப்போதுதான் தோன்றுகிறது
தொடக்கத்தில் எந்தக்காயை 
நகர்த்தியிருக்க வேண்டுமென்பது
குருவிவாலின் நுனிக்கு 
சற்றுதொலைவில் இருப்பதாக
நினைத்துக்கொண்டிருக்கும்போதே 
இச்சா இனியா...
முடிவுக்கு வந்தாயிற்று

முடிவென்பது தொடக்கந்தானே
இப்போதும் குருவிவால் தேய்பிறை 
வரும்வரை கண்மண் தெரியவில்லை
"எத்தன"
"ஆங் இவுரு பெரிய வடிவேலு"

பேசாம ஐநூற்றுப்பிள்ளையாருக்கு அஞ்சு சிதறுகாய் வேண்டிக்கொண்டுவிடலாமா
ம்ஹூம்....இதுதானென்றால்
இத்தனைமுறை விழுந்திருக்க வேண்டாம்
நாற்றம்பிடித்த குருவிவாலோடு 
கண்ணாமூச்சி ஆடியபடி


இருப்பு



குளக்கரையின் யானைத்தூணில்
சங்கிலி மட்டுமே ஏழுகோணலாகக் கிடக்கிறது
தென்னைமட்டையை ஒருநாளைப்போல
இழுத்துவருகிறான் குட்டன்




















உன்இருப்பு தரும் அண்மையை
உன்சொற்களின் கரகரப்பை
முன்முற்றச்செம்பருத்தியிடம்
விட்டுச்செல்
நீ வரும்வரை

பறத்தல்-இருத்தல்

ஆரஞ்சா மஞ்சளா இது
வண்ணத்துப்பூச்சி
சம உயரச்செடியின் மலர்மேல் 
அலைகிறது
அரவமின்றிக் குனிகிறேன்
புறங்கை வீசித்துரத்துகிறது
ஒருமுறையேனும்
பறந்துவிட்டு வா



**************************************************************














செதுக்கிய யுகந்தாண்டி
தெறித்த துகள்கள் மிதித்து மிதித்து
எடுத்தெறிகையில்
எதிர்ப்படவேயில்லை
உறைந்த சிலையழகு



*******************************************************



உடலாகிய உயிர்

அந்தக் கடலின் அலை உயர எழும்பியபோது 
அம்முக்குட்டி அதில் தெரிந்தாள்
மரக்குதிரை மேலேறி வாய்கொள்ளாச்சிரிப்புடன் 
முன்பின்னாக ஆடிய தோற்றம்

கடற்கரை ஓரத்தின் ஐஸ்வண்டி மணியை 
ஆட்டிவிட்டபடி தலைசாய்த்து
குச்சியா கப்பா என நோட்டம் விடுவது அம்முதான்

இங்கே நடக்காதீர் பலகை பார்த்து 
எச்சரிக்கையாக
பூங்கா பாதைக்குள் மட்டும் 
குதித்தபடி நடக்கும் அம்மு

எங்கு திரும்பினும் ஏதாவது ஒரு அம்மு
ஏதாவது அழகில் எதிர்ப்படுகிறாள்
எப்படி முடிகிறது
அம்முவைப்போய் உடலாய்ப்பார்ப்பது 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...