திங்கள், அக்டோபர் 15, 2018

அருவியின் நினைவு

அருவியின் நினைவில்
நனைந்துகொண்டவள்
உதறிக்கொண்டாள்
உலர் தலையை
****************************************
முன்னறையின் இருக்கைகளில் 
ஜாக்கிரதையாகப் போட்டுவைத்த 
அலங்கார விரிப்பு 
நீங்கள் எழுந்தபின் 
தானே சோம்பல்முறித்து நீவிக்கொள்ளும்

*******************************************************
கால்வைக்கவும் அச்சமாயிருக்கிறது 
மழைத்தூய்மையில் முறுவலிக்கும் 
உன்முற்றத்தில்
*****************************************************
உங்களால் நம்பமுடியாது
உரு ஒன்றில் உள்ளம் 
திருவாகவும் மறுவாகவும் இருப்பதையும்
மருகி மருகி
வேறு உருவானதையும்.
ஒன்றையே நினைத்திருப்பீர்
எதிர்முகங்குறித்த மட்டில்*
*******************************************************
வருகிறாயா வருகிறாயா என்று  
எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் 
போதெல்லாம் நீர்வார்த்த செடி இது
நல்ல மணம்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...