ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

போகன்வில்லாவில் படர்ந்த வயது

 மீனின் தலையும்

சிங்கத்தின் பிடரியும்
நீள்சிறகும் கொண்ட என் பேரன்பே
தவ்வித்தவ்வியாவது
வந்து
கணக்காட்சி அருளிவிட்டுப்போ
உனைக்கண்ட பிரமிப்பிலேனும்
அறிவாளிகள் மௌனமாகட்டும்

*******************************************
நாக்கு தொங்க இரைக்கிற
வேட்டை நாய்களைக்
கண்ணாடி
நீள்காதோடு
சுருள் முயலாய்க் காட்டுகிறது

*********************************
நாகரிகத்தின் இசைக்குறிப்புகளை
எச்சில் தொட்டு அழித்து
சாக்பீஸ் தூசியில் பூ வரைந்து
சுடுகாயை முன்கையில் தீட்டிவிட்டு
எம்பியெம்பிக் குதித்தபடி ஓட
வாய்க்காத
வாழ்வென்ன வாழ்வோ

*********************************
பிழைப்புக்கும்
பிழைப்புக்கும் நடுவே
களி
சாக்கடைக்கு
உள்ளிருந்து பாடுகிறார் தவளைகுரு
*****************************************
எங்கிருந்தோ எட்டிப்பார்த்து
எதற்குள்ளோ ஓடிவிட்ட
எலிக்குஞ்சின்
இரு கண்களைத்தான் தேடுகிறேன்
வீடு இப்போது அதனுடையது

******************************************
காய்ந்துவிட்டதா துளிர்த்திருக்கிறதா
என்றே புலப்பட்டுவிடாத
போகன்வில்லா புதரில்
படர்ந்திருக்கிறது இந்த வயது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...